<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Wednesday, May 17, 2006
 
# 204 இன்று முதல் இறந்தகாலம்
என் தோள்மீது அம்பாரி தேடிய ராணி
என் முதுகேறி முத்தாடி வந்தவளா நீ?
நான் பாசத்தில் சுமந்த பால் காவடி
இன்று வேறொருவன் தேரிலே போவதென்னடி?

பிறை நிலா பெளர்ணமி ஆகும் தர்மமோ?
இங்கு மருதானி மஞ்சலுடன் சேர வந்ததோ?

ஏற்றுக்கொள்ள முடியாமல் தேற்றிக்கொள்கிறேன்
தந்தை என்றால் கண்டிப்பென சொல்லியது வீணடி
யார் தாலாட்டித் தூங்கவைத்தார் கேளடி
ராஜாத்தி கேளடி

தோட்டக்காரன் சொந்தமெல்லாம் வாடகைதானே?
மலர்ந்துவிட்ட பின்னே மலர் சூடிடத்தானே?

தாழ்வாரம் திண்ணையென சுமந்து
சோறூட்டி சொன்ன கதை ஆயிரம்
பார்த்துப் பார்த்து உன்னைப் பாதுகாத்து
வழிகாட்டி வந்தது யார் காரியம்?

ஒரு சடங்கில் பந்தம் கை மாறுவாய்
விந்தையடி ராஜாத்தி விந்தையடி
உன் எதிர்காலம் இன்புற வாழ்த்திவிட்டு
இறந்தகாலம் ஆகிறான் உன் தந்தையடி
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Tuesday, May 16, 2006
 
# 203 மத்தாப்பு சுந்தரி
பரிகாசப் பேச்சு சத்தம் அதைக்கேட்டு பொழுதாச்சு
படித்துறையும் பாதக் கொலுசை பாக்காமே சூடாச்சு

ராத்தூக்கம் நான் கண்டு மாசக்கணக்காச்சு
வேலை வெட்டி செஞ்சாலும் அவ நெனைப்பே பொழப்பாச்சு
பரிட்சைக்குப் படிக்கும்போது குறிவெச்சு உதிக்கிறா
ஒழுங்கா பாங்கா இல்லாம விவகாரமா சிரிக்கிறா

எங்கே என் மத்தாப்பு சுந்தரி
என் கனவுக் கூட்டை விட்டு எந்திரி

அழகுன்னு பாக்கப்போனா எத்தனையோ குறையிருக்கும்
அடுத்தவங்க குறையா நெனைக்கும் அம்சமெல்லாம் எனை உறுக்கும்

பேருந்து கைப்பிடி கணக்கா ரெண்டு பக்கம் பின்னியிருப்பா
செம்பட்டைத் தலைமுடிக்கேத்த கனகாம்பரம் சூடியிருப்பா
புளியம்பூ நெறத்தில இடுப்போரத் தோள் பையும்
கண்ணைப் பறிக்கிறாப்புல தாவனி ரவிக்கையும்...

எங்கே என் மத்தாப்பு சுந்தரி
என் கனவுக் கூட்டை விட்டு எந்திரி
| All rights reserved. Udhaya Kulandaivelu©.

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com