<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Monday, June 06, 2005
 
# 168 போதும்
போகும் நிலை புரிந்துகொண்ட நெஞ்சே
இதைத் தவிர வேறு என்ன வேண்டும்?
இருப்பதற்கும் இவை இருந்தால் போதும்!

கடல் பார்த்த வீடு தேவையில்லை
கர்த்தர் ஆலயம் போல் கூரை தேவையில்லை
வானம் பார்த்த பூமியென வாழ்வேன்
தேயும் வெண்ணிலவென் திண்ணையிலே போதும்

தேவைக்கென கோவில் சென்றதில்லை
தேங்காய் சிதறடிக்க வேண்டியது இல்லை
வந்ததெல்லாம் வந்தவரை லாபம்
போனதெல்லாம் இருந்தவரை போதும்

இதைத் தவிர வேறு என்ன வேண்டும்?
இருப்பதற்கும் இவை இருந்தால் போதும்!

ஊரெங்கும் உறவு வைத்ததில்லை
உள்ளவர்க்கு செலவு வைத்ததில்லை
நேசமென்று நான்கு பேர் தேறி
என்னை வழியனுப்பி வைத்து விட்டால் போதும்

மற்றபடி என்னவென்று சொல்ல
காலப் போக்கில் கற்றிடுவாய் மெல்ல
மற்ற செல்வம் எட்டி நின்ற போதும்
சொந்தமென உன்னைக் கொடு போதும்
| All rights reserved. Udhaya Kulandaivelu©.

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com