<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Wednesday, March 19, 2008
 
# 255 கட்டணம்
அணிவித்த ஆசைப்பார்வையை
அழைக்காத விருந்தாளிபோல்
புறக்கணித்திருந்தால் கூட
புரிந்திருப்பேனே நான்

ஆனாலும் உந்தன் விழிகள்
அசைந்தும் அசையாத வண்ணம்
கசிந்தும் கசியாத ஈரம்
உள்ளொன்று சொல்கிறது
புறமொன்று செய்கிறது

அனுமதி கேட்டுத்தானோ ஆசைகூட உதிக்கும் உனக்கு?
அறிவேன் உன் பேதை மனதை
அனுதாபம் ஏற்றுக்கொள்

என் வாசல் திறந்தே இருக்கும்
சிறைவைக்க ஒன்றுமில்லை
என் கோலம் ஊரறியும்
எதிர்க்கின்ற ஆளில்லை

உள்ளத்தில் உதிரும் உண்மை
அதரத்தில் அரங்கேற உனக்கு
எத்தனை திங்கள் ஆகும்
தெரிந்திருந்தால் சொல்லிவிடு

சொல்லாமல் போனால் என்ன
சலிக்கவா போகிறேன்?
காலம்தான் கட்டணம் என்றால்
காதலுக்கது மலிவென்பேன்
| All rights reserved. Udhaya Kulandaivelu©.

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com