உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Saturday, August 25, 2007
# 250 பொல்லாத மனசு
சில நாட்களாகவே ஒரு ஆர்ப்பாட்டமான தெம்மாங்கு எழுதிட மனம் உருத்தி வந்தது. ஆபாசம், ஆங்கிலம் இரண்டும் இல்லாமல் கொண்டாடும்படியாக, எளிமையாக, முனுமுனுக்கும்படியாக இருக்க வேண்டும் என்று எனக்கு நானே பல உத்தரவுகள் கொடுத்து வந்தேன். கடைசியில் இதோ...
சொன்னா கேக்க மாட்டேங்குது
பொல்லாத மனசு
உன்ன தெனமும் கேட்டேங்குது
பாழாப்போன வயசு
நெஞ்சம் காய்ஞ்சு கெடக்குது
கண்ணோ வாரி எறைக்குது
கொட்டிக் கொட்டி தீக்கப்போயும்
ஆசை தீர மறுக்குது
கனவு இந்தக் காத்தைப்போல
கட்டிப்போட முடியலையே
ஆசை இந்த வயிரப்போல
பூட்டி வெக்க முடியலையே
சொன்னா கேக்க மாட்டேங்குது
பொல்லாத மனசு
உன்ன தெனமும் கேட்டேங்குது
பாழாப்போன வயசு
சேத்து வெச்ச பொருமையெல்லாம்
ரெக்கை கட்டிப் பறக்குது
போத்தி வெச்ச பருவமெல்லாம்
பூத்து பூத்துக் குலுங்குது
பாடக் கணக்கு போடும்போதும்
பார்வை மோட்டப் பெருக்குது
ஏத்தி எறக்கிப் உன்னப்பாத்தா
மூச்சு முட்டித் தவிக்குது
சொன்னா கேக்க மாட்டேங்குது
பொல்லாத மனசு
உன்ன தெனமும் கேட்டேங்குது
பாழாப்போன வயசு
# 249 மைத்துணன்
யார் அந்த மங்கை என்று
கேட்கின்ற நண்பனே
உன் தங்கை என்ற உண்மை
தெரிந்துகொண்டால் தாங்குமா?
கட்டுப்பாட்டுக் கொள்கையில்
வளர்த்துவிட்டாய் தங்கையை
உன்னைப்போல்தான் அவளும்
என் நட்பிற்கு உயிரென்று
குரல் இழந்தாயே
அன்றே இழந்தாளாம் அவள்
என்னிடம் தன் மனதை
நட்பில் மறந்த குற்றங்கள்
சொந்தம் என்றால் உதிக்குதா?
நட்புக்குள்ள அருகதை
சொந்தமென்றால் வழுக்குதா?
சொல்லடா நண்பா நான் சோடை போனதெங்கே?
அவள் மனத்தில் இடம் என்றால்
உன் மனதை நீங்கவா?
ஒரு சொந்தம் இழந்துதான்
மறு சொந்தம் பெறுவதா?
நம் நட்பின் புனிதத்தில் என் காதல் கெடுதலா?
அன்பு என்னும் கடலிலே
முத்தெடுக்க போட்டியா?
நம்பிக்கைத் தோழன் இனி மைத்துணன் நம்பி
ஒருவனே என்றாலும் இரு உறவு இனி
உன் வாழ்த்து இல்லையென்றும்
மணந்திடத்தான் போகிறேன்
காதலின் மகிமையினால் மட்டுமல்ல
நட்பின் வலிமையையும் நம்பித்தான்
