<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Wednesday, March 29, 2006
 
# 192 வசியக்காரி வருவாளா?
கோதை பாத்த போதையிலே
தோகை விரிக்கும் ஆண்மயிலே
சோலக் காட்டை சுத்தி சுத்தி நடக்குதடி
மனமே...
ஆவிப் புகையா அலையுதடி
அம்புலி முகந்தான் தவழுதடி

வசியக்காரி வருவாளா?
வாய்க்கு ருசியா தருவாளா?

விருப்பத்தோட விசனம் கலந்து
பரிமாறும் குணந்தான் உனது
சொல்லிப் பாத்தும் கேக்கலையே என் மனசு
கிளியே...
கோலம் போட்டும் வாசல் மூடிக் கெடக்குதடி
கம்புலி போட்டும் குளிருதடி
கறந்த பாலும் கசக்குதடி

வசியக்காரி வருவாளா?
வாய்க்கு ருசியா தருவாளா?

சேத்து வெச்ச ஆசையெல்லாம்
செலவழிஞ்சு போனாலும்
பாக்கப் பாக்க ஆசை இன்னும் ஊறுதடி
வான்மதி...
ஏய்க்க ஏய்க்க தலைக்குமேல ஏறுதடி
சாவிக் கொத்தா சினுங்குதடி
சடலக் காடா எரியுதடி

வசியக்காரி வருவாளா?
வாய்க்கு ருசியா தருவாளா?

சங்கு கழுத்தை நெனைச்சுபுட்டா
கங்கு தெறிக்கிற கரித்துண்டா
நெஞ்சு குதிக்குது நெசமாத்தான்
குயிலே...
வண்டிமாட்டை ஓட்டிகிட்டு
வாடிப்பட்டி எட்டிபுட்டேன்

வசியக்காரி வருவாளா?
வாய்க்கு ருசியா தருவாளா?
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Comments: Post a Comment

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com