<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Tuesday, November 16, 2004
 
# 165 அமாவாசை பிறந்த கதை
அமாவாசை பிறந்த கதை இதுவே!
தாமரை குளம் வந்த கதை இதுவே!

வானை விட்டு மதி நழுவி
தோட்டம் வந்து
தாமரையை காதல் செய்தது
இடை தழுவி

வானவர் பார்த்தனர் பொறாமையில்,
"சந்திரனே நீ மேலவனே
ஒரு கீழ்த்தர பூவிற்கா மனமிழந்தாய்?
அந்தத் தோட்டப்பூவின் காலழகு
இனி உலகப் பார்வைக்கு மூழ்கிவிடும்"

"கழுத்து வரைக்கும் புதைந்து கிட,
குளத்துக்குள்ளே மிதந்து கிட"
தாமரைக்கு தண்டனையாய்
விதித்து விட்டனர் வானவர்கள்!

வானவர் விடுத்த கட்டளையை
மறுக்கும் நிலைமை நிலவுக்கில்லை
கழுத்து மறைந்த காதலியை
கண் கொட்டாமல் பார்த்தபடி,

"தொலைவில் இருந்து காதலிப்பேன்
திங்களுக்கு ஒரு முறை சேர்ந்திருப்பேன்
உன்னுடன் தான் நான் நான் ஆகும்
இனி திங்கள் எனக்கு பேர் ஆகும்"

வெண்மதி வாக்கை வானவர்கள்
ஒப்புக்கொண்டனர் விரக்தியுடன்,
"சமரசம் இன்றி நிலவு இல்லை
நிலவில்லாது வான் விதவை?"

அமாவாசை என்ற இரங்கல் நாள்
வானம் கருப்பு அணிந்திருக்கும்
குளத்தில் நிலவும் குளித்திருக்கும்
வெண்தாமரைகள் உருவகிக்கும்
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Comments:
Excellent, love it! » » »
 
Post a Comment

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com