<$BlogRSDURL$>
உதயாவின் மேய்ச்சல் நிலம்©
Thursday, June 29, 2006
 
# 212 ரத்தக் கோளம்
ஆப்பிரிக்காவிலே எத்தனையோ நாடுகள்
ஒவ்வொரு நாட்டிலும் இரண்டேனும் இனங்கள்
ஒவ்வொரு இனத்திற்கும் இருசாரி தலைவர்கள்
வழிபடாதவர்களுக்கு ஒன்றுக்கிறண்டாய்
எதிரிகள்

போர்கலத்திலே ஏது அடைக்கலம்?
ஆள்பவனும் கொல்கிறான்
எதிர்ப்பவனும் கொல்கிறான்

பெற்றவரிடமிருந்து பறிக்கப்பட்ட பிஞ்சுக் கைகளில்
பரிசாய்க் கிடைத்தது ஆளுயர ஆயுதம்
கொள்கையென்றும் கடவுள் என்றும்
விவரம் தெரியாமல் வீழ்ந்தவர் கோடி
போரிட மறுத்தோ ஏழ்மையினாலோ
இறக்கத்தானே இருக்கிற மீதி?

போர் மேய்ந்த பாதைகள்
புனல் முழுகா தேகங்கள்
பருந்துக்கு விருந்தாகக்
காத்திருக்கும் குடல்கள்

வேண்டாத வரத்திற்கு
பிரசாதம்
உயிர் காற்றிழந்த பைகளாய்
சடலங்கள்
"காயமே இது பொய்யடா"
பட்டவர்கள் சொன்னதில்லை
இந்தப் பொய் மந்திரம்

உடல் குவித்து உச்சி ஏறினால்
கடவுள் கூடத் தென்படுவாரோ?

சிலுவையிடம் தொழுதாலும்
கடன் வாங்கி அழுதாலும்
உயிர் கழுவி உரமாகும் வேளையிது

தர்மத்தின் வாசலை அலங்கரிக்க
ரத்தக் கோளம்தான் கிடைத்ததோ?
| All rights reserved. Udhaya Kulandaivelu©.
Comments: Post a Comment

Powered by Blogger

Weblog Commenting and Trackback by HaloScan.com